Thursday, March 23, 2017

சொற்பேச்சு கேளாண்மை

மகனின்
சொற்பேச்சுகேளாண்மை
கண்டிப்பில்
பேசாவன்முறையை 
கையிலெடுத்ததால்
பின்னே அவனால்
முடிந்தளவு
கெஞ்சி அழுதும்
இரக்கமில்லாமல்
செவிசாய்க்காத காரணத்தால்
நீர்வற்றி
பொருமிகொண்டே
படுத்துறங்கி போனானோ.
என்ன பாடுபட்டிருக்குமோ
பிள்ளை மனம்
தாமதமாய் சமாதானப்படுத்த
சென்றதால்...
எத்தனை நீரருந்தியும்
கனமாய் உள்ளிறங்கவில்லை.
உறக்கமில்லாமல்
இப்பொழுது
நான்
#மகனதிகாரம்

கால் பிடிப்பு

அன்றொரு நாள் சற்று நீண்டதூரம்
நடந்தே சென்றுவந்ததால்
இரவில்
"அப்பா கால் வலிக்குதப்பா"
என்றதற்கு 
கால்களிரண்டையும்
பிடித்துவிட்டேன்.
 உறங்கி போனான்
பிறிதொரு நாளில் இதே போன்று
வலித்ததாய் சொன்னான்
கால்பந்து பயிற்சியால் வலி
இருக்குமென்று
எண்ணிக்கொண்டு ஒன்றும்
சொல்லவில்லை நான்
தொடர்ச்சியாய் கேட்பதும்
நானும் சிறுபிள்ளையென்று
பிடித்துவிடுவதும்
நாள்தோறும் நிகழ்வாயிற்று
சிலநாட்களில்
ஏதேனும் காரணம் சொல்லியும்
ஏமாற்றிவிடுகிறேன்
கணுக்கால் முன்னாடியாம்
முட்டி பின்னாடியாம்
சந்தனம் பூசச்சொல்வது போல
முன்னாடி பின்னாடி
அங்கே இங்கே என்று
அலைகழிப்பதுவும் நடக்கும்
சிலநாட்களில்
இன்று கைவலிப்பதாய் நானொரு
பாசாங்கு. விட்டுவிடுவானென்ற
நம்பிக்கையில். என்
கைபிடித்து வாயருகே
கொண்டுசென்று ஊதி ஊதி
பிறகு கேட்கிறான்
"வலி போயிடுச்சா" என்று
பாசத்தில் நெகிழ்ந்து
இம்மென்றவுடன்
சொன்னான்
"சரி இப்ப காலை பிடிச்சி விடு"
#மகனதிகாரம்